Showing posts with label சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா. Show all posts
Showing posts with label சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா. Show all posts

Saturday, April 16, 2011

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா



சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக்களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே -உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக்கனியமுதே- கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே என் முன்னே
ஆடி வரும் தேனே

ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளங்குளிருதடீ
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப் போய்
ஆவி தழுவதடீ!

உச்சி தனை முகந்தால் கருவம் 
ஓங்கி வளருதடீ
மெச்சியுனை யூரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ

கன்னத்தில் முத்தமிட்டால் -உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தமாகுதடீ!

சற்றுன் முகஞ்சிவந்தால் மனது
சஞ்சலமாகுதடீ
நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு
நெஞ்சம் பதைக்குதடீ

உன் கண்ணில் நீ வழிந்தால் என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடீ
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ